இந்தியாவில் இத்தனை பேருக்கு ஒமிக்ரான் தொற்றா? அச்சத்தில் மக்கள்!
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு என்பது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கொரனோ தொற்றினால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன் , லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவில் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு தடுப்பூசிகளை அறிமுகம் செய்து அதை செலுத்தும் பணியை துரிதமாக செயல்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது வெகுவாக குறைந்து வந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது.
நேற்றுவரை ஒமிக்ரானால் 1700 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருந்தனர் .இதனால் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா ,கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொற்றை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியையும் மத்திய அரசு அறிவித்து , அதன் எதிரொலியாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று முதல் தடுப்பூசி செலுத்தும்பணி தொடங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 1892 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1700 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,892 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 568 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 121 ,குஜராத்தில் 152, கேரளாவில் 185 , ராஜஸ்தானில் 174 , தெலுங்கானாவில் 67 என மொத்தம் 1892 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.