ஜோத்பூர் வன்முறை: 140 பேர் கைது.. மே. 6 வரை ஊரடங்கு நீட்டிப்பு..
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 140 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு மே 6 வரை 144 தடை உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கொடி மற்றும் ஒலிபெருக்கி பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதையடுத்து, ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த வன்றை சம்பவத்தால் 4 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து ஜோத்பூர் மாவட்டத்தின் உதய் மந்திர், நகோரி கேட், கந்தா பல்சா, பிரதாப் நகர், தேவ் நகர், சூர் சகர் மற்றும் சர்தர்புரா உள்ளிட்ட 10 காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நேற்றி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். . அத்துடன் ஜோத்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது.
மேலும், ஜோத்பூர் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். அத்துடன் மே 6 ஆம் தேதி வரை ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வங்கி அதிகாரிகள், ஊடகவியாளர்கள் மற்றும் செய்தித்தாள் விநியோகிப்பவர்கள் போன்ற சிலருக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.