டாடா சுமோ மீது விழுந்த ராட்சத பாறை- 13 பேர் உடல் நசுங்கி பலி
இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் டாடா சுமோ வாகனம் மீது பெரிய பாறை ஒன்று சரிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.
பழங்குடியினர் வசிக்கும் பாங்கி பள்ளத்தாக்கில் உள்ள கில்லர்-உதய்பூர் சாலையில் டாடா சுமோ ஒன்று சென்றுகொண்டிருந்தது. காடு நல்லா என்ற இடத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக மலையின் பெரும் பகுதி சரிந்து வாகனம் மீது விழுந்தது. இந்தச் சம்பவத்தில் டாடா சுமோ வாகனத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர். உடனே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உருக்குலைந்த வாகனத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் வேளையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) தகவல்படி, ஜூலை 26 வரை மாநிலம் முழுவதும் மழை இயல்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை ஆய்வு மையம், ஜூலை 23 முதல் 26 வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஜூலை 27 முதல் பருவமழை தீவிரமடையக்கூடும் என்றும், ஜூலை 27 முதல் 29 வரை மாநிலம் முழுவதும் கன முதல் மிகக் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளது.

