திருப்பதி கோயிலில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.114 கோடி உண்டியல் வருமானம்..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்தில் உண்டியல் வருமாணம் ரூ.114 கோடி என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். பல்வேறு ஊர்கள், மாநிலங்கள், நாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவது, எடைக்கு எடை பணம், தரிசனம் என நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர். அந்தவகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏப்ரல் மாதத்தில் மட்டும் உண்டியல் காணிக்கை வருமானமாக ரூ.114 கோடியே 12 லட்சம் கிடைத்துள்ளதாகவும், லட்டு பிரசாதம் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 42.64 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றதாகவும், தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 9.03 லட்சம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 67 ஆயிரத்து 853 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், அங்குள்ள கல்யாணக்கட்டாக்களில் 33 ஆயிரத்து 381 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது. அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்திருப்பதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.