இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா – அரசு அதிரடி நடவடிக்கை
கொரோனா பரவலைத் தொடக்கத்திலேயே கண்டுணர்ந்து அதன் பரவலைத் தடுத்த சில நாடுகளில் இலங்கையும் ஒன்று. முதல் அலையின்போது முன்னெச்சரிக்கையோடு பல நடவடிக்கைகள் மேற்கொண்டதால் பெரிய பாதிப்புகளிலிருந்து தப்பியது.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.
இலங்கையில் தற்போது கொரோனாவின் மொத்த பாதிப்பு 36,049 பேர். அவர்களில் 27,061 பேர் சிகிச்சையால் குணமடைந்து விட்டனர். இறப்பு எண்ணிக்கை 165 பேர்.
இதனால், கொரோனா தடுப்பு பணிகளில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளித்தாலும் சிலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புகிறார்கள் என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டது. இதற்கான அதிரடி நடவடிக்கை ஒன்றை இலங்கை அரசு எடுக்க முடிவெடுத்துள்ளது.
அதன்படி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புபவர்களுக்காக ஹோட்டல் ஒன்றை மருத்துவமனையாக மாற்ற விருக்கிறார்கள். அதில் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்படுமாம். இதை ராணுவ தளபதி தெரிவித்திருந்தார். ஆயினும், அறிகுறிகளற்ற நோயாளிகளையே அங்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்படுவார்களாம். தீவிர பாதிப்பு உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற வேண்டுமாம்.