“போக்சோ வழக்கில் இருமுறை கைதானால் குண்டர் சட்டம் பாயும்” – கோவை சரக டி.ஐ.ஜி., முத்துச்சாமி பேட்டி

 

“போக்சோ வழக்கில் இருமுறை கைதானால் குண்டர் சட்டம் பாயும்” – கோவை சரக டி.ஐ.ஜி., முத்துச்சாமி பேட்டி

ஈரோடு

போக்சோ வழக்கில் இரு முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கோவை சரக டி.ஜ.ஜி., முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்டு உள்ள “காக்கும் கரங்கள் குழுவினருக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்ட எஸ்.பி. சசிமோகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சி வகுப்பில் 34 குழுக்களை சேர்ந்த அதிகாரிகள், கிராம பஞ்சாயத்தை சேந்தவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து டி.ஐ.ஜி முத்துசாமி ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் காக்கும் கரங்கள் குழுவினர் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கடந்த மாதத்தைவிட இந்த மாதம் குறைந்து உள்ளதாகவும், இது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.

“போக்சோ வழக்கில் இருமுறை கைதானால் குண்டர் சட்டம் பாயும்” – கோவை சரக டி.ஐ.ஜி., முத்துச்சாமி பேட்டி

ஈரோடு மாவட்டத்தில் இந்த 34 குழுவினர் கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், கிட்டத்தட்ட குழு தொடங்கி ஒரு மாதத்திற்கு உள்ளாகவே 450 கூட்டங்களை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த டி.ஜ.ஜி முத்துச்சாமி, இதன் மூலம் கிட்டத்தட்ட ஈரோட்டில் 15 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறினார்.

பொதுமக்களும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போது தயங்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுக்க முன்வருவதாக கூறிய அவர், அதேபோன்று கடந்த ஜூன் மாதம் 9 போக்சோ வழக்குகள் பதிவாகி இருந்ததாகவும், ஆனால் ஜூலை மாதம் 6 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், போக்சோ வழக்கில் இரு முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் டிஜஜி முத்துச்சாமி தெரிவித்தார்..