139 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர்… ஐதராபாத் இளம் பெண் புகாரால் அதிர்ச்சி!
ஐதராபாத்தில் இளம் பெண் ஒருவர் தன்னை வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என 139 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 25 வயதான பெண்மணி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக மாணவர் சங்கத் தலைவர்கள், அரசியல்வாதிகளின் பி.ஏ-க்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் உள்பட 139 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறியுள்ளார். இதனால், ஐதராபாத் நகரில் உள்ள பஞ்சகுட்டா போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, பல ஆண்டுகளாக தன்னை பலரும் முறைகேடாக பயன்படுத்திக் கொண்டதாகவும், அவர்கள் மீது புகார் அளிக்க வந்துள்ளதாகவும் கூறினார். அவர் அளித்த புகார் அடிப்படையில் 42 பக்கத்துக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை மருத்துவ ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
பெண்ணின் பெயர், யார் என்ற விவரம் வெளியாகவில்லை. 25 வயதான அந்த பெண்மணிக்கு கடந்த ஆண்டு விவாகரத்து நடந்துள்ளது. 2009ம் ஆண்டு முதல் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 20 பேர் உள்பட 139 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஏன் போலீசில் புகார் கூறவில்லை என்ற கேட்டபோது, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியதால் பயந்து புகார் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்த புகார் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.