கண் கருவளையம் போக்கும் காய்கறி, பழங்கள்!

 

கண் கருவளையம் போக்கும் காய்கறி, பழங்கள்!

கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவது ஒன்றும் மிகப்பெரிய, அபாயமான உடல் நலப் பிரச்னை இல்லைதான். இருப்பினும் கருவளையம் என்றாலே சோர்வு, வயோதிகம், ஆரோக்கியமின்மையின் அடையாளமாக பார்க்கப்படுவதால் பலரும் அதைக் கண்டு ஒருவித அலர்ஜி உண்டு. கருவளையம் வந்தவர்களுக்குத்தான் அதன் அவஸ்தை புரியும். அதை போக்க கண்ட கண்ட வழிகளை முயற்சி செய்து மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பார்கள்.

கண் கருவளையம் போக்கும் காய்கறி, பழங்கள்!

சரியான தூக்கமின்மை, அலர்ஜி, சில வகையான காய்ச்சல் காரணமாக ஒவ்வாமை, சரும தொற்று நோய், மரபியல், தொடர்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டே இருப்பது, சூரிய ஒளியில் அதிகம் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது.

இயற்கையான முறையில் சில உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கருவளையம் பிரச்னையைத் தடுக்கலாம். வைட்டமின் சி அதிகம் உள்ள தக்காளி அதில் முக்கியமானது. இது உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதாலும், ஃப்ரீ ராடிக்கல்ஸ் பிரச்னையில் இருந்து காப்பதாலும் கரு வளையம் நீங்குகிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு, பப்பாளி, ப்ரோக்கோலி போன்றவற்றையும் சாப்பிடலாம்.

வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கண்கள் மீது வைக்கலாம். மேலும் வெள்ளரிக்காயை சாப்பிடவும் செய்யலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உள்ளேயும் வெளியேயும் இருந்து கருவளையத்தை நீக்க உதவும். வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள் சருமத்தின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, சருமத்தின் எலாஸ்டிசிட்டி (நெகிழ்ந்தாலும் பழைய படி இயல்பு நிலைக்குத் திரும்புதல்) அதிகரிக்கும்.

பாதாம் உள்ளிட்ட வைட்டமின் இ உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவும் சருமத்தின் எலாஸ்டிசிட்டியை அதிகரிக்கச் செய்யும். நல்லெண்ணெய்யிலும் வைட்டமின் இ உள்ளது. எள், நல்லெண்ணையை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளலாம். நல்லெண்ணெய்யைச் சருமத்தில் தடவி வரலாம்.

கீரை மற்றும் பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் கே உள்ளது. இது சருமத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கும், சருமத்துக்குப் பொலிவு தரும். சூரிய ஒளிக் கதிர் வீச்சில் இருந்து தப்பிக்க சன் ப்ரொடக்‌ஷன் ஸ்கிரீன் க்ரீம் தடவி வரலாம்.