“காவல் துறையினரை நல்லா கவனிங்க” – அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!
தமிழக காவல்துறையில் போலீஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும், போலீஸாரின் ஊதியத்தை உயர்த்தவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கரூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் மாசிலாமணி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு:
“போக்குவரத்து சந்திப்புகளில் ஒரு பத்து நிமிடம் போக்குவரத்து காவலர் இல்லாமல் இருந்தால் அங்கு நிலைமை என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். சமூகத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதும் தெரிந்தது தான். மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய போலீஸாரின் சேவை அவசியமானது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த போலீஸாருக்கு தமிழகத்தில் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களை நன்றாக கவனிக்க வேண்டும். போலீஸாருக்கு சங்கம் வைக்க அனுமதி இல்லாத சூழலில், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வலுவான தீர்வு முறை தேவை.
குடும்பத்தை கவனிக்காமல் ஒருநாள் கூட விடுமுறையில்லாமல் 24 மணி நேரமும் அவர்கள் பணிபுரிகின்றனர். இதுவே, போலீஸார் சில நேரங்களில் கோபத்துடன் பணிபுரிய காரணமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் காவல் துறை பணியிலிருந்து 6,823 பேர் விலகியுள்ளனர். வேலை கிடைப்பது கடினமாக இருக்கும் சூழலில் காவல்துறை பணியிலிருந்து விலகுகிறார்கள் என்றால் வேலைபளு, மனஅழுத்தம், மன உளைச்சல் இருப்பது நிரூபணமாகிறது. இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பணியின்போது போலீஸார் உயிரிழந்தால் தற்போது ரூ.15 லட்சமும், முழுமையாக ஊனம் அடைந்தால் ரூ.8 லட்சமும் வழங்கப்படுகிறது.
இதை முறையே ரூ.25 லட்சம், ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும். அதேபோல ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உள்ள போலீஸ் காப்பீட்டு திட்டத் தொகையை ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உயர்த்த வேண்டும். காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், போலீஸார் மன அழுத்தம், மனஉளைச்சலுடன் பணி செய்து வருகின்றனர். இதனால், போலீஸாருக்கு பிற அரசு ஊழியர்களைக் காட்டிலும் 10 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும். போலீஸாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீத கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.
போலீஸாருக்கு 8 மணி நேர வேலை என்கிறார்கள். ஆனால், 24 மணி நேரம் பணிபுரிகின்றனர். இனிவரும் காலங்களில் 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதன்படி, 3 ஷிப்ட் அடிப்படையில் போலீஸார் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். தமிழக போலீஸார் சிறப்பாக பணிபுரிய இந்த ஒருங்கிணைந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதை நிறைவேற்றினால் மட்டுமே சிறந்த காவலர்களை எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.