ஆசிரியர்களை முன்கள பணியாளர்களாக அறிவியுங்க… ரூ.50 லட்சம் கொடுங்க.. கர்நாடக அரசுக்கு குமாரசாமி வலியுறுத்தல்
ஆசிரியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் அவர்களது குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கர்நாடக பா.ஜ.க. அரசை குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்ப்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமாரசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான டிவிட்டில், கொரோனா தொற்றுநோயால் இறந்த அனைத்து ஆசிரியர்களையும் கொரோனா வாரியர்ஸாக (முன்கள பணியாளர்கள்) கருதி அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆசிரியர்களை கொரோனா வாரியர்ஸாக கருத வேண்டும். தேர்தல் பணி அல்லது வேறு எந்த பொறுப்பிலும் அவர்ளை நியமித்த அரசாங்கம், அவர்களின் மரணத்துக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். மாநிலத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தை கட்டமைக்கும் ஆசிரியர்கள் குறித்து அரசின் அலட்சியமான அணுகுமுறை மற்றும் கவனக்குறைவை நான் கண்டிக்கிறேன். ஆசிரியர்களை கொரோனா வாரியர்ஸ் (முன்கள பணியாளர்கள்) மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு எந்தவித தாமதமும் இன்றி இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு உடனடியாக எடுக்க வேண்டும் நான் கோரிக்கை விடுக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.