‘காணாமல் போன பாட்டி, பேத்தி’..சாக்குபையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு!
தென்காசி அருகே காணாமல் போன பாட்டி, பேத்தியின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே உள்ள கீழப்புலியூரைச் சேர்ந்தவர் கோமதியம்மாள்(55). இவரது பேத்தி உத்ரா (1 1/2 வயது). கடந்த ஜனவரி 12ம் தேதி கோமதியம்மாளும் உத்ராவும் காணாமல் போனதாக அவர்களது உறவினர்கள் தென்காசி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில், வழக்குப்பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மத்தளம்பாறை அருகே சாக்குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்துள்ளனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கோமதியம்மாளின் உறவினர்களால் குழந்தை மற்றும் கோமதியம்மாளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கோமதியம்மாள் முத்துமாலைபுரத்தைச் சேர்ந்த ஒரு நபரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் அந்த கடனை கேட்க வந்த போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் கோமதியம்மாளும் அவரது பேத்தியும் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்தது. இதில், சம்பந்தப்பட்ட 3 பேரை கைது செய்திருக்கும் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.