தடுப்பணையில் மூழ்கி அரசு மருத்துவமனை கம்பவுண்டர் பலி!
கோவை
கோவை ஆழியாறு அருகே தடுப்பணையில் கால்தவறி விழுந்து அரசு மருத்துவமனை கம்பவுண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பொதுப்பணித்துறை குடியிருப்பை சேர்ந்தவர் கனகராஜ். இவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பவுண்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று கனகராஜ் மயிலாடுதுறை பகுதியில் உள்ள தடுப்பணையில் குளித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, தண்ணீரில் மிதந்து சென்ற தேங்காயை எடுப்பதற்காக, கரையில் இருந்தவாறு முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி தண்ணீரில் விழுந்த கனகராஜ், ஆழமான பகுதியில் சிக்கி மூழ்கினார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் நீரில் இறங்கி தேடியபோது, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.