மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு ஆலோசனை! – பீதியில் மக்கள்
சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஊரடங்குக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் 2500 என்ற அளவில் உள்ளது. சென்னையில் மட்டும் மிகப்பெரிய அளவில் தொற்று இருந்த நிலையில், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னையில் அமல்படுத்தப்பட்ட போன்று முழு ஊரடங்கை அமல்படுத்தினால் பரவாயில்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு அரசு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மதுரையில் ஜூன் 23ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கைக் கொண்டுவருவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சென்னையைப் போல 12 நாள் ஊரடங்காக இல்லாமல், எட்டு நாள் ஊரடங்காக முதல் கட்டமாக அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் வசித்து வந்த பலரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனர். ஆனால், சென்னை அளவுக்கு மாநிலத்தின் மற்றப் பகுதிகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சென்னையில் முதலில் 50, 100 என்ற அளவில்தான் கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது மதுரையில் தினமும் 80 முதல் 100 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் சில வாரங்களில் மதுரையும் கொரோனா மையமாக மாறிவிடும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரக்கைவிடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்தே ஊரடங்கைக் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் கொரோனாவைக் கட்டுப்படுத்த எதையாவது செய்யுங்கள், கொரோனா அழிந்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.