‘பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க’ அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!
ஆண்டுதோறும் தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 பணமும், பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படும். வழக்கமாக வழங்கப்பட்டு வந்த ரூ.1000ஐ உயர்த்தி ரூ.2,500 ஆக வரும் பொங்கலுக்கு வழங்கவிருப்பதாக கடந்த 19ம் தேதி முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
தேர்தலுக்கான லஞ்சமாக இந்த பணம் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்ததற்கு பதில் அளித்த அமைச்சர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடவே பணம் உயர்த்தப்பட்டிருப்பதாக கூறினர். இந்த நிலையில், ஜனவரி 4ம் தேதி முதல் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், 2.10 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்றும் இலங்கை தமிழர்களின் 18,923 அட்டைகளுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக்கூடிய 3,75,235 சர்க்கரை அட்டைதாரர்களும் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.