சிவகங்கையில் நீர் நிலைகளில் மூழ்கி சகோதரிகள் உட்பட 4 சிறுவர்கள் பலி

 

சிவகங்கையில் நீர் நிலைகளில் மூழ்கி சகோதரிகள் உட்பட 4 சிறுவர்கள் பலி

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று இருவேறு இடங்களில் நீர்நிலைகளில் குளித்தபோது, நீரில் மூழ்கி சகோதரிகள் உள்பட 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கணேசன். இவருக்கு, ஹன்சிகா(7), பழனிகுமார்(5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கணேசன் குடும்பத்துடன் மறவமங்கலம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் அருகேயுள்ள குளத்திற்கு உறவினருடன் சென்று குழந்தைகள் இருவரும் குளித்தனர்.

அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமாகினார். இதனை கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி தேடியபோது குழந்தைகள் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்த தேவக்கோட்டை போலீசார் குழந்தைகளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கையில் நீர் நிலைகளில் மூழ்கி சகோதரிகள் உட்பட 4 சிறுவர்கள் பலி

இதேபோல், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள பாகனேரியை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகள்கள் வைஷ்ணவி(15), மற்றும் ஶ்ரீநிதி(10). நேற்று இவர்கள் வீட்டின் அருகேயுள்ள நகரம்பட்டி கண்மாயில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த காளையார்கோயில் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.