ஜெ. அன்பழகன் மறைவு : நாட்டில் முதல்முறையாக எம்.எல்.ஏ. ஒருவர் கொரோனாவுக்கு பலி… !
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை 8.05 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 62.
அன்பழகன் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கட்சி பணிகளை திறம்பட செய்து முடித்து தலைமையிடம் பாராட்டு தருவதில் வல்லவர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர். எதிர்க்கட்சியினரிடமும் கட்சி கொள்கை என்பதை தாண்டி நட்புடன் பழகி வந்தவர். உலக நாடுகளை அச்சுறுத்து வரும் கொரோனா பாதிப்பு தமிழகத்திலும் வேகம் காட்டி வருகிறது.
அந்த வகையில் கொரோனா காலக்கட்டத்திலும் களப்பணி ஆற்றி வந்த இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் எம்.எல்.ஏ. ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது இதுவே முதல்முறையாகும். எம்.எல்.ஏ. அன்பழகன் மறைவு குறித்த விவரம் உள்துறை, மத்திய சுகாதாரத்துறை கவனத்திற்கு சென்றுள்ளது.