காரைக்குடியில் தொழில் போட்டியால் மீன் வியாபாரி படுகொலை – போலீசார் விசாரணை!

 

காரைக்குடியில் தொழில் போட்டியால் மீன் வியாபாரி படுகொலை – போலீசார் விசாரணை!

சிவகங்கை

காரைக்குடியில் தொழில் போட்டி காரணமாக மீன் வியாபாரி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியை திருச்செல்வம் (29). மீன் வியாபாரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துமணி (27) என்பவருக்கும் காரைக்குடி சந்தையில் மீன்கடை வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது குறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு காரைக்குடி சந்தையில் மது அருந்தி கொண்டிருந்த திருச்செல்வம் மற்றும் முத்துமணிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவரும், தங்களிடம் இருந்த கத்தியால் ஒருவரையொருவர் சரமாரியாக குத்திக் கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த திருச்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரைக்குடியில் தொழில் போட்டியால் மீன் வியாபாரி படுகொலை – போலீசார் விசாரணை!

மேலும், முத்துமணிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி போலீசார், படுகாயமடைந்த முத்துமணியை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து, திருச்செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய காரைக்குடி போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.