வேலூர் அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

 

வேலூர் அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

வேலூர்

வேலூர் மாவட்டம் லத்தேரியில் பட்டாசுக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கடை உரிமையாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் பகுதியில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மதியம் தீடீரென தீ விபத்து ஏற்பட்டு, தீ பற்றி எரிந்தது. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

வேலூர் அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

கடையில் தீ பற்றி எரிவதை கண்டு, அந்த பகுதி பொது மக்கள் தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தகவல் அறிந்து காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 2 பேரன்கள் தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவரது உடல்களையும் லத்தேரி போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.