கையை கடித்த மகனை கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை..பெரம்பலூர் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாண்டகப்பாடி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி ராமசாமி – சரஸ்வதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் வெளியூரில் வேலை செய்து வந்த நிலையில், மூத்த மகன் முத்தையா(29) சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்த அவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறும், தனது சொத்தை பிரித்து தருமாறும் தந்தையிடம் சண்டை போட்டுள்ளார். அதற்கு தந்தை மறுப்பு தெரிவித்ததால், குடிபோதையில் இருந்த முத்தையா ராமசாமியை அடித்ததோடு அவரை கடித்துள்ளார்.
அதில் லேசான காயம் அடைந்த ராமசாமி அன்று இரவு குடித்து விட்டு, வீட்டின் அருகே இருந்த கோவிலில் நின்று கொண்டிருந்த மகனிடம் சண்டை போட்டுள்ளார். சிறிது நேரத்தில் சண்டை கைகலப்பாக மாறி இருவரும் ஆள் இல்லாத இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு ராமசாமி, முத்தையாவின் கழுத்தை கயிற்றைக் கொண்டு இறுக்கி கொலை செய்திருக்கிறார். முத்தையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை எண்ணி அதிர்ச்சி அடைந்த ராமசாமி, முத்தையாவின் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார்.
மறுநாள் காலை அந்த வழியே சென்ற மக்கள், முத்தையாவின் சடலத்தை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், முத்தையாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டதில் ராமசாமி தான் கொலை செய்தார் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ராமசாமியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.