நிலத் தகராறில் விவசாயி அடித்துக்கொலை – ஒருவர் கைது!
திண்டுக்கல்
நத்தம் அருகே நிலத் தகராறில் விவசாயியை அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி – மலையூர் பள்ளத்துகாடு பகுதியை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு (40). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று நில பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், ஆத்திரமடைந்த தங்கராஜ் தான் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் வெள்ளைக் கண்ணுவை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த நத்தம் போலீசார், வெள்ளைக்கண்ணு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளி தங்கராஜை கைது செய்தனர்.