ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு!

 

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு!

ஈரோடு

பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27). இவர் அதே பகுதியில் மீன்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கவிதாவுக்கு, மற்றொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அந்த நபருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மனைவியை மீட்டுத்தரக் கோரி ராமச்சந்திரன் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அதனை போலீசார் பெற மறுத்து, அவரை திருப்பி அனுப்பி உள்ளனர்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு!

தொடர்ந்து, ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்ற நிலையில், அவரால் எஸ்.பி.யை நேரடியாக சந்திக்க முடியவில்லை. இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த ராமச்சந்திரன் இன்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது 2 மகன்களுடன் வந்தார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதனை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் ஏமாற்றமடைந்த ராமச்சந்திரன் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காட்சி அளித்தது. தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபடும் ராமச்சந்திரனிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.