செயின் பறிப்பின்போது குளத்தில் தள்ளி பெண் கொலை… முன்னாள் ராணுவ வீரர் கைது…

 

செயின் பறிப்பின்போது குளத்தில் தள்ளி பெண் கொலை… முன்னாள் ராணுவ வீரர் கைது…

கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே செயின் பறிப்பு முயற்சியின்போது கொள்ளையன் தள்ளியதில் பெண் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அடுத்த மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி வின்சென்ட். இவரது மனைவி மேரிஜெயா(45). இவர் நேற்று மதியம் முளகுமூடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

அங்குள்ள நல்லபிள்ளை பெற்றான் குளத்தின் அருகே சென்ற மேரி ஜெயாவிடம் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் என்பவர் கத்தியைக்காட்டி நகைகளை பறிக்க முயன்றார். அப்போது மேரி ஜெயா கத்தி கூச்சலிட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனை கண்ட மெர்லின் ராஜ், அவரை குளத்தில் தள்ளிவிட்டு தப்பியோட முயன்றார்.

செயின் பறிப்பின்போது குளத்தில் தள்ளி பெண் கொலை… முன்னாள் ராணுவ வீரர் கைது…

இதில், மேரிஜெயா குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அந்தபகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, திருவட்டாறு போலீசார் சடலத்தை கைப்பற்றி நாகர்கோயில் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலையாளி மெர்லின்ராஜை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, கொலையாளி மெர்லின் ராஜை குண்டர் சட்டத்தில் அடைக்கக் கோரி மேரி ஜெயாவின் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகர்கோயில் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.