ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
ஈரோடு
ஈரோட்டில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (55).
அதே பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வரும் இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், பிரேம்குமார், புவனேஸ்குமார் ஆகிய இரு மகன்களும், ஷாலினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த ராஜா, கடந்த வியாழக்கிழமை அன்று உயிரிழந்தார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த குடும்பத்தினர், வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதனை அறிந்த உறவினர்கள் கருங்கல்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவர் இழந்த சோகத்தில் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் என 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.