“ஈரோடு மஞ்சள் மார்க்கெட் செயல்பட அனுமதிக்க வேண்டும்”- அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை

 

“ஈரோடு மஞ்சள் மார்க்கெட் செயல்பட அனுமதிக்க வேண்டும்”- அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு

பொதுமுடக்கத்தில் தளர்வு அளித்து, ஈரோடு மஞ்சள் மார்க்கெட் செயல்பட அரசு அனுமதி வழங்க வேண்டுமென மஞ்சள் விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் ஈரோடு, கோபி சொசைட்டி என 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. 2 மாதங்களுக்கு முன் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்தை தொட்ட நிலையில், தற்போது சராசரியாக குவிண்டாலுக்கு ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை விலை கிடைத்து வருகிறது. கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் மஞ்சள் விலையில் எதிர்பார்த்த ஏற்றம் கிடைக்கவில்லை.

தங்களிடம் இருப்பில் உள்ள மஞ்சள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட புது மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் அமலாகி உள்ளதால், மஞ்சளை அறுவடை செய்தல், பதப்படுத்துதல் மற்றும் மஞ்சளை விற்பனைக்கும் கிடங்குகளில் இருப்பு வைக்கவும் பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

“ஈரோடு மஞ்சள் மார்க்கெட் செயல்பட அனுமதிக்க வேண்டும்”- அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து பேசிய மஞ்சள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், ஈரோடு மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்த புதிய மஞ்சளை பாதுகாப்பாக வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், மஞ்சள் கிருமி நாசினி என்பதால் மருந்து உற்பத்தி மற்றும் மளிகை தேவைக்கு தொடர்ந்து தடையின்றி அனுப்பி வைக்க வேண்டியுள்ளதாகவும் கூறினர்.

இந்த சூழலில், முழு ஊரடங்கு காரணமாக நேற்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர்கள், அடுத்த வாரம் முதல் மஞ்சள் சந்தைக்கு விலக்கு அளித்து, ஏலம் நடைபெற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.