8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாயாரின் 2-வது கணவர் கைது
ஈரோடு
ஈரோடு அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த, தாயாரின் 2-வது கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர். ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் தீனதயாளன்(30). இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்த பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
மேலும், முதல் கணவருக்கு பிறந்த 8 வயது பெண் குழந்தை, கஸ்பாபேட்டையில் உள்ள விடுதியில் தங்கி, பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக விடுதி மூடப்பட்டதால் வீட்டிற்கு வந்து தங்கியிருந்த அந்த சிறுமிக்கு, தீனதயாளன் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தெரிவித்த தகவலின் பேரில், அவரது தாய் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் செய்தார். இதனையடுத்து, அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், ஈரோடு தெற்கு போலீசார் தீனதயாளன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.