ஜனநாயக கடமையை ஆற்றிய தேர்தல் அதிகாரி, சென்னை கமிஷனர்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியது. காலையிலேயே ஓட்டு போட மக்கள் கூட்டம் குவிந்து விட்டது. அரசியல் கட்சியினர், அரசு ஊழியர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரும் வரிசைக் கட்டிக் கொண்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காலை நிலவரப்படி 13.80% வாக்குப்பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருவல்லிக்கேணி பெருநகர நகராட்சி நடுநிலைப்பள்ளி எல்லிஸ் புரம் வளாக வாக்குச்சாவடியில் சென்னை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் வரிசையில் நின்று வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி வனிதா அகர்வால் மற்றும் மகள் அக்க்ஷிதாவும் வாக்களிக்க சென்றிருந்தனர். அதே போல, சென்னை நெற்குன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
முன்னதாக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே செய்து முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.