அமமுகவினருக்கு அழைப்பு விடுத்த ஈபிஎஸ்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக- அமமுக இணைய வாய்ப்பே இல்லை. அதிமுகவிலிருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்தால் தலைமை கழகம் முடிவு செய்யும். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நடைபெற்றுவருகிறது. விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். மக்கள் மனம் நிறைவு பெறும் அளவிற்கு அதிமுக தேர்தல் அறிக்கை நிச்சயம் இருக்கும்.
நிறைய திட்டங்களை கொண்டுவந்திருப்பதால் அதிமுக நிச்சயம் வெற்றிப்பெறும். இதுவே என் கருத்துக்கணிப்பு. மக்கள் அதிமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென நினைக்கின்றனர். அதற்கு இடைத்தேர்தலே சாட்சி. இந்தியாவில் பல கட்சிகள் உள்ளன. அதில் அமமுகவும் ஒன்று. அமமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அங்கிருந்து பலர் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். வந்தால் வரவேற்போம். கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் ஏற்கனவே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன” எனக்கூறினார்.