பூவினும் மெல்லிய பூங்கொடி இடை வேண்டுமா?

 

பூவினும் மெல்லிய பூங்கொடி இடை வேண்டுமா?

`பூவினும் மெல்லிய பூங்கொடி…’ போன்ற இடை (இடுப்பு) வேண்டுமென்று பலரும் விரும்புவார்கள். மனிதனின் உடலமைப்பின்படி இடைதான் உடலின் மேல்பகுதியை தாங்குகிறது. அதன்படி இடை மெலிதாக இருக்கமுடியாது. பார்ப்பதற்கு மெலிதாக இருந்தாலும் அந்த இடத்தில் உள்ள எலும்புகள் மிகவும் வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்க முடியும். ஆனாலும் இடை மெலிந்த பெண்களைத்தான் ஆண்களில் பலருக்குப் பிடிக்கும். பெண்களுக்கும்கூட இடை சிறுத்து இருந்தால்தான் பிடிக்கும். இடை சிறுத்து மெல்லிய பூங்கொடிபோன்று இருக்கவேண்டுமானால் உண்ணும் உணவை சரிசெய்ய வேண்டும். முக்கியமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பூவினும் மெல்லிய பூங்கொடி இடை வேண்டுமா?

உணவுமுறை
இன்றைக்கு உணவுமுறை மாறிவிட்டதால்தான் உடல் எடை அதிகரிப்பதுடன் இடையும் பருத்துக் காணப்படுகிறது. உண்ணும் உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக இஞ்சிச்சாறு இதற்கு நல்ல தீர்வு தரும். இரண்டு டீஸ்பூன் இஞ்சிச்சாறுடன் சம அளவு தேன் சேர்த்துக் கலந்து தினமும் இரண்டுதடவை குடித்துவந்தால் ஒரு மாதத்தில் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து எடை குறையும், இடையும் சிறுக்கும்.

பூவினும் மெல்லிய பூங்கொடி இடை வேண்டுமா?

சோம்பு நீர்
இஞ்சிச்சாற்றை குடித்தால் மட்டும் எடை குறைவதோ, இடை சிறுப்பதோ நடந்துவிடாது. இதற்கு மேலும் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக தினமும் அருந்தும் நீர் சோம்பு (பெருஞ்சீரகம்) கலந்த நீராக இருப்பது நல்லது. காலையில் கண் விழித்ததும் ஒன்று அல்லது இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்கவைத்து அடுப்பிலிருந்து இறக்கியதும் ஒரு கைப்பிடி பெருஞ்சீரகத்தை அதில் சேர்த்தால் அதிலுள்ள சத்துகள் நீரில் கலந்துவிடும். சூடு ஆறியதும் அந்த நீரை அருந்திவந்தால் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

பூவினும் மெல்லிய பூங்கொடி இடை வேண்டுமா?

கரும்புச்சாறு
வெள்ளைப்பூசணிக்காய் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். தேவையான அளவு வெள்ளைப்பூசணியை எடுத்து அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து அரைத்துக் குடிக்கலாம். அதேபோல், கரும்புச்சாறு அருந்துவதும்கூட தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும். கரும்புச்சாறு அருந்துவதால் உடல் சோர்வுகள் நீங்கும். இதேபோல் எலுமிச்சைச்சாற்றுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவருவது சிறப்பான தீர்வைத்தரும். நெல்லிக்காய் சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து குடிப்பதும் நல்லது.

அன்னாசி
இவை அனைத்துக்கும் மேலாக அன்னாசிப்பழத்தைச் சாப்பிட்டு வருவது சிறப்பான தீர்வைத் தரும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து தாளித்து சிறு துண்டுகளாக நறுக்கிய அன்னாசிப்பழத்தைச் சேர்த்து உப்பு சேர்த்து வதக்க வேண்டும். அதன்பிறகு மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து பச்சடிபோல செய்து சாப்பிட்டு வந்தாலும் தேவையற்ற கொழுப்புகள் கரையும். இடையும் சிறுக்கும்.