“திமுக ஜெயித்தால் அதிமுக காணாமல் போகும்” – தினகரன் பரபரப்பு பேட்டி!
சசிகலா விடுதலையாகி சென்னை வந்துவிட்டபோதிலும் அவரின் அரசியல் நகர்வு எப்படியிருக்கும் என்பதை அவர் கூறவில்லை. அதனால் அவரின் சார்பில் அவ்வப்போது பேட்டியளிக்கும் டிடிவி தினகரனின் பேச்சுக்களைப் பொறுத்தே சசிகலாவின் அடுத்த நடவடிக்கை என்னாவாக இருக்கும் என்பதே கணிக்கமுடிகிறது. இச்சூழலில் தற்போது ஒரத்தநாட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “அதிமுகவை மீட்டெடுப்பது எங்களுடைய ஒரே நோக்கம். பிரதமர் மோடி தமிழகத்திற்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் தமிழகத்திற்கு வருகை ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
ஸ்டாலினின் பிரச்சாரம் நாங்கள் பேசுவது போலவே இருக்கிறது. அவர் அமமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறார். தப்பித்தவறி திமுக தேர்தலில் வெற்றி பெற்றால், நாங்கள் இதே ரோட்டில் இருப்போம். ஆனால் அதிமுகவினர் எங்கே இருப்பார்கள் என அவர்களுக்கே தெரியும். சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளை செய்து கொண்டுள்ளோம். அதில் வெற்றி பெற்றவுடன் சசிகலா தேர்தலில் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்று கூறியுள்ளார்.