“மதுரைக்கு எய்ம்ஸ் வருமா? வராதா?”எனும் வாசகத்துடன் கூடிய டீ சர்ட்டில் திமுகவினர் போராட்டம்
“மதுரைக்கு எய்ம்ஸ் வருமா? வராதா?”எனும் வாசகத்துடன் கூடிய டீ சர்ட் அணிந்து திமுகவினர் மரக்கன்று நட்டு நூதன முறையில் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட, தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை நுழைவு வாயிலில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி தாமதப்படுத்துவதை கண்டித்து திமுகவினர் மரக்கன்றுகளை நட்டு கண்டனம் தெரிவித்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில், 2018ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் ஜப்பான் நிதி குழுவிடம் இருந்து, நிதி வருவதற்கு தாமதம் ஆவதால் மருத்துவமனை கட்டுமான பணி தாமதப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானபணி மிக மெதுவாக நடைபெறுகிறது என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில், அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்துவதில்லை என்றும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இழமகிழன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து “மதுரைக்கு எய்ம்ஸ் வருமா? வராதா?” எனும் வாசகத்துடன் கூடிய டீ சர்ட் அணிந்துக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அருகில் உள்ள தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை நுழைவுவாயிலில் 70க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.