திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கைது!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இல்லலூர் செங்காடு பகுதியில் அமமுக பிரமுகர் தாண்டவ மூர்த்தி மற்றும் குமார் என்பவருக்கு சொந்தமாக 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு போக்குவரத்துக்கு வழி இல்லாத காரணத்தினால் அரசு நிலத்தில் 50க்கும் மேற்பட்ட குண்டர்கள் உடன் பாதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையறிந்த செங்காடு பொதுமக்கள் உதவியுடன் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன், தந்தை லட்சுமிபதி அவர்களை தடுக்க முற்பட்டுள்ளார். அப்போது தாண்டவமூர்த்தியின் ஆட்கள் லட்சுமிபதி மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியதில் லட்சுமிபதி உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமிபதி, தான் அனுமதிபெற்று வைத்திருந்த துப்பாக்கியால் தாண்டவமூர்த்தியை சுட்டதாக திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமமுக பிரமுகர் தாண்டவ மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்போரூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே இந்த கைகலப்பில் காயமான பையூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மனிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.