திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக செயலாளரின் அண்ணன் அடித்துக் கொலை!

 

திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக  செயலாளரின் அண்ணன் அடித்துக் கொலை!

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக தேமுதிக மாவட்ட செயலாளரின் அண்ணன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த எர்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக செயலாளரா பொறுப்பு வகித்து வருகிறார். இவரது அண்ணன் மாதேஸ்வரன். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஞானவேல் என்பவர் இளம்பெண் ஒருவருடம் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இதனை ஹரிகிருஷ்ணன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, நேற்று மாலையில் கோவிலுக்கு சென்ற ஹரிகிருஷ்ணனின் மனைவி அருணாவை, ஞானவேல் மற்றும் அவரது நண்பர்கள் கதிர்வேல், துளசி, சந்தோஷ் உள்ளிட்டோர் இருசக்கர வாகனத்தில் மறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனையறிந்த, மாதேஸ்வரன் தகராறில் ஈடுபட்ட ஞானவேல் மற்றும் அவரது கூட்டாளிகளை தட்டிக்கேட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக  செயலாளரின் அண்ணன் அடித்துக் கொலை!

அப்போது, அவர்கள் மாதேஸ்வரனை சரமாரியாக தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மாதேஸ்வரனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஞானவேல் உள்ளிட்ட 3 பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேமுதிக மாவட்ட செயலாளரின் சகோதரர் கொலை செய்யப்பட்டதால், கந்திலி சுற்றுவட்டார பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.