ஆண்டிபட்டி அருகே டாஸ்மாக்கில் மது அருந்திய இளைஞர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை
தேனி
ஆண்டிபட்டி அருகே அரசு மதுபானக் கடையில் மது அருந்திய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்த குருசாமி மகன் பழனிச்சாமி (35). டிராக்டர் ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பழனிச்சாமி, தனது நண்பருடன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார். மது அருந்திய பின் நண்பர் வீட்டுக்கு சென்ற நிலையில், பழனிச்சாமி வீடு திரும்ப வில்லை என கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை டாஸ்மாக்கில் பார் நடத்துபவர் கடையை திறக்க சென்றபோது, பழனிச்சாமி உட்கார்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பழனிசாமியின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பழனிசாமியின் நண்பரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.