திருவாரூரில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்!

 
murder

திருவாரூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் அடுத்த அகரதிருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகன் குமரேசன் (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு இரணியன் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில், குமரேசன், நேற்று மாலை  தனது உறவினர் சுசிலா என்பவருடன் கானூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கிடாரங்கொண்டான் அருகே சென்றபோது 2 இருசக்கர வாகனங்களில் வந்த மர்மநபர்கள் திடீரென குமரேசனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மேலும், அந்த கும்பல் குமரேசனின் தலையை துண்டித்து கொலை செய்து விட்டுஅங்கிருந்து தப்பிச் சென்றனர். 

thiruvarur

தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே குமரேசன் கொலை செய்யப்பட்டதை அறிந்து அரசு மருத்துவமனை முன்பு திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆத்திரத்தில் அங்கு நிறுத்தி வைத்திருந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில், கொலையான குமரேசன் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மேலும், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து, தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீடாமங்கலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி தமிழார்வன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது மீண்டும் ஒரு இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.