குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணை!

 
Suicide

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள பொய்கைபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கரன். தொழிலாளி. இவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கலையரசி (28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், சிவசங்கரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கலையரசி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

karur

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த கலையரசி நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து கலையரசின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, திருமணமாகி 3 ஆண்டுகளில் கலையரசி தற்கொலை செய்ததால் இந்த சம்பவம் குறித்து குளித்தலை வருவாய் கோட்டாட்சியர்  புஷ்பாதேவி விசாரணை நடத்தி வருகிறார்.