காவல் நிலையம் அருகே வைக்கோல் படப்பில் திடீர் தீ விபத்து!
விருதுநகர்
ராஜபாளையம் அருகே சேத்தூர் காவல் நிலையம் பின்புறம் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் காவல் நிலையம் உள்ளது. காவல் நிலையத்தின் பின் பகுதியில் உள்ள காலி இடத்தில், அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளுக்கு வைப்பதற்காக வைக்கோல் பிரிகளை படப்பு போட்டு வைத்திருந்தனர். மேலும், இவற்றை அண்டை மாநிலமான கேரளாவுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று வைக்கோல் படப்பில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. மேலும், தீ மளமளவென அருகேயுள்ள படப்புகளிலும் பரவி பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்தில் சுந்தரம், ஆறுமுகம் உள்ளிட்ட மூவருக்கு சொந்தமான வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து சேதடைந்தன. தீ விபத்து குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.