காதல் திருமணம் செய்த பிளஸ் 1 மாணவி மர்ம மரணம்- போலீசார் விசாரணை!
வேலூர்
காட்பாடியில் காதல் திருணம் செய்த பிளஸ் 1 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பிலாசூரை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவியை அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர் காதலித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும், நேற்று காட்பாடியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து, காட்பாடியில் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு குளிர்பானம் அருந்திய மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முரளி, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவிக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதனிடையே, மாயமான மகள் உயிரிழந்த தகவலை அறிந்து மாணவியின் பெற்றோர் கதறி அழுதது மருத்துனையில் இருந்தவர்களை கண் கலங்க செய்தது.