ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி… 2 குழந்தைகள் பலியான சோகம்!
திருச்சி
திருவெறும்பூரில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளுடன் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி வ.உ.சி நகரை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அதே பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனங்களை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவிவை சித்ராதேவி(40) இவர்களுக்கு தனலட்சுமி(19), திவ்யா (17) மற்றும் விக்னேஷ்(13) என 3 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே நந்தகுமார் இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை வழங்குவது உள்ளிட்ட தொண்டு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு சித்ராதேவி எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சித்ராதேவி, குழந்தைகடளுடன் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை கண்டு 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைககாக அனுமதித்தனர். அங்கு நந்தகுமாரின் மகன் விக்னேஸ்வரன், இளைய மகள் திவ்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், சித்ராதேவி மற்றும் மூத்த மகள் தனலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயன்றதில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.