தனியார் நிலத்தில் மணல் திருடிய இருவர் கைது, 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருப்பத்தூர்
ஆம்பூர் அருகே பாலாற்று படுகையில் தனியார் நிலங்களில் மணல் திருடிய இருவரை மடக்கிப்பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்கிருஷ்ணாபுரம் சாமியார் மடம் பகுதியில் பாலாற்றின் படுகையில் ஏராளமான தனியார் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் மர்மநபர்கள் சிலர், இரவு நேரங்களில் கிணறு போன்று குழிதோண்டி தொடர்ச்சியாக மணலை திருடி வந்தனர்.
இதுகுறித்து, நிலத்தின் உரிமையாளர்கள் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், மணல் திருட்டு தொடர் கதையாகி வந்தது. இந்நிலையில், மர்மநபர்கள் மீண்டும் மணல் திருட்டில் ஈடுபடுவதாக ஆம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சாமியார் மடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தாஸ் மற்றும் கவி ஆகியோரை மடக்கிப்பிடித்தனர். இதனையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.