காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை – போலீஸ் விசாரணை
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர், இரும்பு ராடால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் மகன் ஆனந்தபாபு (32). இவர் அதேபகுதியில் கோழி வியாபாரம் மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தார். இவர் அதேபகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில், அதற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகே நின்றிருந்த ஆனந்த்பாபுவை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் இரும்பு ராட் மற்றும் உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த்பாபுவை, உறவினர்கள் மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து, ஆனந்த்பாபுவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஆனந்த்பாபு, காதல் விவகாரம் தொடர்பாக கொலைசெய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.