டிக்டாக் ரவுடி பேபி சூர்யா, அவரது ஆண் நண்பர் கைது... கோவை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை!

 
rowdy baby

கோவையை சேர்ந்த தம்பதியினர் அளித்த புகாரின் பேரில் மதுரையில் இருந்த டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா, அவரது ஆண் நண்பரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி திலகா. இவர்கள் இருவரும் யூடியூபில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பதியினரின் 10 வயது மகள் ஆன்லைன் வகுப்பில் உள்ள சிரமங்கள் குறித்து பேசிய வீடியோ பதிவை யூடியூபில் வெளியிட்டனர். அந்த வீடியோவிற்கு டிக்டாக் பிரலமான ரவுடி பேபி சூர்யா, அவதூறாக கமெண்ட் செய்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து முத்து - திலகா தம்பதியினர் கேட்டபோது ரவுடி பேபி சூர்யா அவதூறாக பேசியதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தம்பதியரின் செல்போன் எண்களை, தனது எண் என கூறி சூர்யா பதிவிட்ட நிலையில், பலரும் சூர்யா என நினைத்து அவர்களை தொடர்பு கொண்டு அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான முத்து - திலாக தம்பதியினர் கோவை மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். 

arrest

அதன் பேரில், 7 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுரையில் தங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண் நண்பர் சிக்கா ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர். தொடர்ந்து, இருவரையும் கோவை அழைத்து வந்த சைபர் கிரைம் போலீசார், அவர்களை கோவை எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொரோனா பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, அவர்களை காணொலி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சூர்யாவை சிறையிலடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.