சாத்தூர் அருகே வைப்பாற்றில் மூழ்கி தாய், மகன் உள்பட மூவர் பலி!

 
drowned

சாத்தூர் அருகே வைப்பாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி தாய், மகன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள நென்மேனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (42). இவரது மனைவி விஜயலட்சுமி (37). இவர்களது மகன் கேசவன்(10). பாலகிருஷ்ணன் மலேசியாவில் பணிபுரியும் நிலையில், விஜயலட்சுமி சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தில் தனது பெற்றோர் வீட்டில், மகனுடன் வசித்து வந்தார். பள்ளி விடுமுறை விடுமுறை காரணமாக விஜயலட்சுமி, 5ஆம் வகுப்பு படிக்கும் தனது மகனை அழைத்துக்கொண்டு நென்மேனி வீட்டிற்கு சென்றிருந்தார். 

drowning

இந்த நிலையில், நேற்று மாலை, விஜயலட்சுமி, கேசவன் மற்றும் பாலகிருஷ்ணனின் சகோதரர் மகன் பூரணகோகுல் (10) ஆகியோர் வீட்டின் அருகே உள்ள வைப்பாற்றுக்கு குளிக்க சென்றனர். ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கேசவனும், பூரண கோகுலும் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி,  அவர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால், அவரும் நீரில் மூழ்கினார். இதனை கண்டு அருகிலிருந்தவர்கள் சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வைப்பாற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, விஜயலட்சுமி, அவரது கேசவன் மற்றும் அவரது உறவினர் மகன் பூரணகோகுல் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.  தொடர்ந்து, நெல்மேனி போலீசார், மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நென்மேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.