பல்லடத்தில் வடமாநில தொழிலாளியை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் - போலீசார் விசாரணை!
![palladam](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/a7bd0bf8d4e13d6fa6dbc6d714c0d225.jpg)
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பானிபூரி கடையில் வடமாநில ஊழியரை, 4 இளைஞர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் எதிரே பானிபூரி கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த பப்பு என்பவர் தொழிலாளி ஆக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில் கடைக்கு மதுபோதையில் வந்த 4 இளைஞர்கள், பானிபூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது, தமிழ் இளைஞர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர் பப்புவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், வடமாநில ஊழியரை சரமாரியாக தாக்கினர். இதில் பப்புவின் தலையில் காயம் ஏற்பட்டது.
அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், மோதலில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன், செவிசக்ஷன், சக்தி பிரணவ், சாந்து ஆகிய 4 பேரையும் மடக்கிப்பிடித்து, விசாரணைக்காக பல்லடம் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். மேலும், காயமடைந்த வடமாநில இளைஞர் பப்பு, பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.