குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை… விரக்தியில் யூடியூப் பார்த்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவர்!
தென்காசி
தென்காசி அருகே தந்தை குடித்துவிட்டு தகராறு செய்ததால், மனைமுடைந்த கல்லூரி மாணவர் யூடியூப் வீடியோ பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்துள்ள தேவிபட்டணம் பகுதியை சேர்ந்தவர் காளிராஜ். கூலி தொழிலாளி. இவரது மகன் ஜீவா (22). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி கணினி அறிவியல் படித்து வந்தார். மேலும், காவலர் தேர்வுக்காக, ராஜபாளையத்தில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்று படித்து வந்தார்.இந்த நிலையில், இவரது தந்தை காளிராஜூக்கு, மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தாராம்.
இதனால் வேதனையடைந்த ஜீவா, கடந்த 3 ஆண்டுகளாக தந்தை காளிராஜூடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். மேலும், தந்தையின் நடவடிக்கையால் மனமுடைந்து காணப்பட்டு வந்த ஜீவா நேற்று முன்தினம் மாலை யூடியூபில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என வீடியோ பார்த்துள்ளார். பின்னர், அதன்படி தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த சிவகிரி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் யூடியூப் பார்த்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.