தென்காசியில் மினிலாரியில் கடத்தமுயன்ற ரூ.10.40 லட்சம் குட்கா பறிமுதல் – 5 பேர் கைது
தென்காசி
தென்காசி அருகே மினி லாரியில் கடத்திவரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 5 பேரை கைதுசெய்தனர். தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திவந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், தென்காசி நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வாகனத்தின் உள்ளே குட்கா பொருட்களை மூட்டையை மூட்டையாக மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சுமார் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை கடத்திவந்த வினோத்குமார், அழகுமுத்து, இளங்கோ.,கணேஷ்பிரபு மற்றும் மதன்ராஜ் ஆகியோரை கைதுசெய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி உள்ளிட்ட 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.