நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர்... வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

தருமபுரி அருகே கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவன் (40). கட்டி மேஸ்திரி. இவரது மனைவி இந்திராணி (32). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்திராணி ஓசூரில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இந்திராணியின் நடத்தையில் சிவன் சந்தேகமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

dharmapuri ttn

இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த சிவன், மனைவி இந்திராணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் இருவரும் தூங்கச்சென்ற நிலையில், வாழ்வில் விரக்தியடைந்த இந்திராணி அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவல் அறிந்து அங்கு திரண்ட இந்திராணியின் உறவினர்கள், அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி பஞ்சப்பள்ளி - காடுசெட்டிப்பட்டி சாலையில் சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து இந்திராணி பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.