குடும்ப தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே குடும்ப தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்துள்ள கடைகிராமம் பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் (52). இவர் கோட்டார் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், யேசுதாசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனைவி பிரேமா கோபித்துக்கொண்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளா.

suicide

இதனால், எஸ்எஸ்ஐ யேசுதாஸ் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை யேசுதாசின் வீடு நீண்டநேரமாக பூட்டிக்கிடந்துள்ளது.  இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, எஸ்.எஸ்.ஐ யேசுதாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குடும்பத்தினர் மற்றும் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த தற்கொலை சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஏசுதாஸ் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.