திருச்சியில் பறிமுதலான ரூ.5 லட்சம் மதுபானங்கள் அழிப்பு!

 
liquor sized

திருச்சி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்தபோது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதுபானங்கள் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் கடந்த ஆண்டு ஜுலை 20ஆம் தேதி போலி மதுபான பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி  முத்தரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

trichy

அப்போது, தெற்கு இருங்களூரைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில்  90 அட்டை பெட்டிகளில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 4,310 போலி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரன்ஸ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பறிமுதல் செய்த போலி மதுபானங்களை சிறுகனூர் அருகேயுள்ள தச்சங்குறிச்சி வனப்பகுதியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், திருவெறும்பூர் மதுவிலக்கு டி.எஸ்.பி. முத்தரசு தலைமையில் திருச்சி மாவட்ட கலால் உதவி ஆணையர் வைத்தியநாதன் மேற்பார்வையில் போலி மதுபானங்களை தரையில் ஊற்றி அழித்தனர். மதுபான காலி பாட்டில்கள் விரைவில் ஏலம் விடப்படுமென போலீசார் தெரிவித்தனர்.