சேலம் மூக்கனேரியில் இளம்பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

 
dead body

சேலத்தில் ஏரியில் இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள மூக்கனேரி, தொடர் மழையின் காரணமாக நிரம்பி உள்ளது. இந்த நிலையில், நேற்று ஏரியில் பெண் சடலம் ஒன்று மிதந்தது. இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். அப்போது, பெண்ணின் உடலில் கல் கட்டி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

salem

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த பெண் கன்னங்குறிச்சி சத்யா நகரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரது மனைவி கவுசல்யா என தெரிய வந்தது. இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து செவ்வாய்ப்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கவுசல்யா வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டுவேலை செய்து வந்த அவர் கடந்த 4ஆம் தேதி வேலைக்கு சென்றபோது மாயமாகி உள்ளார். இதுகுறித்து அவரது தந்தை செவ்வாப்பேட்டை போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், அவர் நேற்று ஏரியில் சடலமாக மீட்கப்பட்டது தெரியவந்தது. இதனால், அவர் குடும்ப தகராறில் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்ணடு வருகின்றனர்.