பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றத்தை ரத்துசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
மதுரை
திருப்பரங்குன்றத்தில் பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் சுவரொட்டிகள் மூலம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் மதனகலா. இவர் கொரோனா காலத்தில் மார்க்கெட்
வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஊரடங்கு காலத்தில் திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவளித்தும் வந்தார். அக்கறையுடன் செயல்பட்டு பொதுமக்களின் பிரச்னைகளை தீர்த்து வந்தார். இதனால் பொதுமக்களுக்கு, ஆய்வாளர் மதனகலா மீது தனிப்பிரியம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆய்வாளர் மதனகலா தேனி மாவட்டம், போடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அறிந்த திருப்பரங்குன்றம் பகுதி பொதுமக்களும், வியாபாரிகளும், ஆய்வாளர் மதனகலாவின் இடமாற்றத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி, சுவரொட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.